நீதிக் கதைகள்

அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர* நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர… தனிமை.. தனிமை.. தனிமை..!

சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்..

“உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!”

கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!

அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்..

” நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!”

எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்..

சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..

“ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..

ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..

மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை… ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.

இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க…. அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!

அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்…?

மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..

செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..

“நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..!”

நீதி : தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மிகச்சில மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை.. குறை கூறாதீர்கள்..!

 

கீதாவுக்கு அன்று பிறந்தநாள்.. மிகவும் பரபரப்பாக இருந்தாள். அவளுடன் படிக்கும் ரமேஷிடமிருந்து வாழ்த்து எஸ் எம் எஸ் அல்லது அழைப்பு வரும் என்று காத்திருந்தாள். யார் யாரோ வாழ்த்தினர். ஆனால் ரமேஷிடமிருந்து வரவில்லை. கீதா சற்று கலக்கமுற்றாள். அவளுக்கு அவனைப் பிடிக்கும்.. அவனுக்கு..? தெரியாது.

அப்போது, கீதாவின் குட்டித் தங்கை ரமா கையில் தன் பாடநோட்டுடன் வந்து கீதாவைக் கூப்பிட்டாள்.

“அக்கா..!”

கீதா குனிந்து பார்த்து, அலட்சியப்படுத்தினாள்.. இவளுக்கு இதே வேலை.. இது என்ன.. அது என்ன.. அதைச் சொல்லிக்கொடு என்று ஒரே தொல்லை. இரண்டாம் வகுப்பு படிக்கும் ரமாவுக்கு கீதா என்ன ட்யூஷன் மிஸ்ஸா..?

ரமா மீண்டும் அழைத்தாள்.. “அக்கா..!”

“ப்ஸ்ஸ்ஸ்ஸ்.. தொல்லை பண்ணாதே.. அப்புறம் வா..!”

இந்த ரமேஷுக்கு ரொம்ப கர்வம்.. ஒரு க்ரீட்டிங் அனுப்பினால் குறைந்தா போய்விடுவான்..? மனதுக்குள் சிந்தனை ஓடியதில் நேரம் போனது தெரியவில்லை.

இரவும் வந்தது. ஆனால் ரமேஷிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. கீதா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. ‘திமிர் பிடித்த ராஸ்கல்.. அந்த ஷீலா பிறந்தநாளுக்கு உருகி உருகி கால் செய்தானே.. அவளுக்கு நான் என்ன குறைச்சலா..? மனம் குமைந்தது.

மீண்டும் ரமா.. “அக்கா.. ப்ளீஸ்.. இந்த நோட்டைப் பாரேன்..!”

கீதாவுக்கு இருந்த கடுப்பில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நோட்டைப் பிடுங்கி தரையில் விசிறி அடித்தாள். “போ சனியனே.. மூட் தெரியாமல் உயிரை வாங்காதே..!”

குழந்தை காயப்பட்டு போயிற்று. மெல்ல நோட்டைப் பொறுக்கி எடுத்து தன் அறைக்குத் திரும்பும் ரமாவின் கண்களில் கண்ணீர் கரை கட்டியது.

அப்புறமும் கொஞ்ச நேரம் ரமேஷுக்காக காத்திருந்தாள் கீதா. பலனில்லை.

வீட்டின் உள்ளே ஏதோ வேலையாக போகும்போது கீதா கவனித்தாள்.. ரமாவின் அறையில் விளக்கு எரியவில்லை. தூங்கிவிட்டாளோ..? பாவம் .. குழந்தையை ரொம்ப புண்படுத்திவிட்டேனோ..? கீதா மனம் கசிந்தது..

அறைக்குள் வந்து மெல்ல அழைத்தாள்..

ரமா…!

அக்கா..!

தூங்கிட்டியா..?

இல்லேக்கா..

சரி நோட்டை எடுத்துட்டு வா..

குழந்தை குதூகலத்துடன் கட்டிலில் இருந்து குதித்து ஓடி நோட்டை எடுத்துவந்து நீட்டியது.

எது உனக்கு புரியலே..? காட்டு.. சொல்லித் தரேன்..

இதைப் பார் அக்கா..

நோட்டை விரித்த கீதா வியந்து போனாள்.. குழந்தை தனக்குத் தெரிந்த முறையில் ஒரு பிறந்த நாள் வாழ்த்துப்படம் வரைந்து வைத்திருந்தாள்..!

என் அன்பு அக்காவுக்கு என்று பெரிய எழுத்துகளில் வண்ண வண்ண எழுத்துகளில் எழுதி, கீழே ஒரு பூங்கொத்து.. அதற்கும் கீழே பிறந்த நாள் வாழ்த்துகள் என்று மீண்டும் வண்ண எழுத்துகள்..!

நேற்றிரவு நீண்ட நேரம் ஏதோ படிக்கிறாள் என்று நினைத்தோமே.. இதைத்தான் வரைந்தாளா..? ஆசையுடன் வாழ்த்து தெரிவிக்க வந்த குழந்தையைத்தான் விரட்டி அடித்தேனா..?

“என் செல்லமே..” வாரியணைத்து முத்தமழை பொழிந்தாள் கீதா.

நீதி : கானல் நீருக்காக காலடியில் ஊற்றெடுக்கும் நறுஞ்சுவை நீரை உதாசீனம் செய்யாதீர்.

 

ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள்.
ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.
பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.

வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது.

பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் ‘நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்’ என்று சொன்னான்.

மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள்.

இத்தனை பேரில் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று.

அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர்.

பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது.

மற்ற ஒன்பது விவசாயிகளும் “இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு” என்று கத்திக் கொண்டே அவன் மேல் பாய்ந்தனர்.

அந்த விவசாயி கெஞ்சிக் கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாகக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர்.

அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான்.

அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான்.

மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது. ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளிப் பாதுகாப்பை இழந்து பரிதாபமாகக் கருகிச் செத்துப் போய் விட்டனர்.

நீதி : கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய்.
தீர விசாரித்துத் தெளிவதே மெய்.

 

ஒரு நாட்டை ஆண்ட அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் நிவாரணம் கேட்டான்.

தலைமை மருத்துவன் “மன்னா! இதற்கு மருந்தே கிடையாது” என்று உண்மையைச் சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான். ஆத்திரம் தலைக்கேறி தலைமை மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான்.

ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான். ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு பணித்தான்.

மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான். பிரச்சினைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான். அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர். “வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா” என்று கூறினர்.

நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியவில்லை.

அரசனை இந்த நிலையில் சந்தித்தால் கண்டிப்பாகத் தலைமை மருத்துவனுக்கு நேர்ந்த கதிதான் தமக்கும் நடக்கும் என்று எல்லோருக்கும் புரிந்தது. கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இளைய மருத்துவன் திரும்பவும் “என்னை நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்” என்று கூறினான்.

வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக் கொண்டார்கள். அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன், என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.

அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக் கொண்டு அரசவைக்கு வந்தார்கள்.

அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான். “மன்னா இதில் இருக்கும் மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்று போகும். இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம் முடி வளர ஆரம்பிக்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும் தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும்” என்றான்.

மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. “இப்போதே அந்தப்புரத்திற்குப் போய் தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன்” என்று கிளம்பினான்.

அப்போது மருத்துவன் “மன்னா. இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமென்றால், அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது!” என்றான்.

முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான். மந்திரியிடம் மருத்துவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான். மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டே ஓடி விட்டார்கள்.

அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்து அதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான். அப்போது அவனுக்கு மருத்துவன் சொல்லிய பக்குவம் கவனத்திற்கு வந்தது. “குரங்கை நினைக்கக் கூடாது” என்று நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான். என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்ற இயலவில்லை.

மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை. சற்று நேரம் கழித்து முயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான்.

ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும் மருத்துவனின் அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றிய யோசனை வந்து கொண்டே இருந்தது.

பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப் பேசாமல் வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான்.

நீதி : பிடிவாதக்காரர்களையும், முட்டாள்களையும் திருத்த நேர்வழி பயன்படாது.

 

ஜிங்ஜு ஒரு வித்தியாசமான பிறவி. தான் ஆணழகனாய், அறிவுள்ளவனாய் பிறந்திருந்தால்
இளவரசியை திருமணம் செய்திருக்கலாம் என்று பகல் கனவு காண்பவன். தன்னிடமுள்ள
குறைகளை எண்ணி எப்போதும் வருத்தத்திலேயே இருப்பவன். மருந்திற்கு கூட அவன்
முகத்தில் சிரிப்பை பார்க்க முடியாது. தெருவில் யாராவது சிரித்தால், அவர்கள்
தன்னைப் பார்த்துதான் சிரிப்பதாக நினைத்துக் கொண்டு கோபமடைந்து அவர்களிடம்
சண்டைக்கு செல்வான். இறுதியில் ஒருநாள் தனது குணத்தை புரிந்து கொள்ள இயலாமல்,
ஜென் மாஸ்டரிடம் கேட்டு மனத் தெளிவடைய நினைத்தான்.

“யார் சிரித்தாலும் எனக்கு கோபம் வருகிறது ஏன் அப்படி?” என்று மாஸ்டரிடம்
கேட்டான். இதை கேட்டவுடன் ஜென் மாஸ்டர் `ஹாஹா’ என்று சிரித்துக் கொண்டே
சென்றுவிட்டார்.

ஜென் மாஸ்டர் எதற்கு சிரித்தார்? என்ற காரணம் புரியாமல் ஜிங்ஜு மிகவும்
குழம்பினான். அதை நினைத்து, நினைத்து மூன்று நாட்களாக ஊண் உறக்கமின்றி
குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான்.

அடுத்த நாள் ஜென் மாஸ்டரிடம் சென்று, “அன்று என்னைப் பார்த்து ஏன் மாஸ்டர்
சிரித்தீர்கள்? நான் வருத்தத்தில் மூன்று நாட்களாக சாப்பிடவே இல்லை” என்று
கூறினான். உடனே ஜென் மாஸ்டர், “முட்டாளே! இப்போதாவது உனக்கு புரிகிறதா? நீ
கோமாளியை விட சிறியவன், அது தான் உனது பிரச்சினை” என்று கூறினார். இதைக் கேட்ட
ஜிங்ஜு அதிர்ந்து போனான்.

“நான் ஒரு கோமாளியை விட சிறியவன் என எக்காரணத்தால் குறிப்பிட்டீர்கள்?” என்று
கோபத்துடன் கேட்டான்.

அதற்கு ஜென் மாஸ்டர், “கோமாளியாவது பிறர் சிரிப்பதைக் கண்டு மகிழும்
தன்மையுடையவன். ஆனால் நீ மற்றவர்கள் சிரிப்பதை எண்ணி வருந்தி குழப்பத்துடன்
இருக்கிறாய். இப்போது சொல், நீ கோமாளியை விட சிறியவன் தானே” என்றார்.

இதைக் கேட்ட ஜிங்ஜு தனது தவறை உணர்ந்து, குழப்பம் தீர்ந்த சந்தோஷத்தில்
சிரித்தான்.

நீதி: என்ன நடந்தாலும், அதனால் விளையும் நன்மையை மட்டும் எடுத்துக் கொண்டு
மகிழும் தன்மை, வாழ்வில் மன அமைதி மற்றும் சந்தோஷத்தை பெற்றுத் தரும்.

நீதிக் கதைகள்

ஏமாந்த சிறுத்தை
 
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.

அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. ‘எதைத் துரத்தலாம்’ என்று தயங்கி நின்றது. பிறகு, ‘சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்’ என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.

உடனே சிறுத்தை “அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி… புள்ளி மானைப் பிடிக்கலாம்” என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.

நீதி : முக்கியமான நேரத்தில் முக்கியமான் முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.

 
 
எலியும் பாலும்

பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உயரமான பானை. இதனால் பாலைக் குடிக்க முடியாமல் எலிகள் திண்டாடின.
இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது. அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.

அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது: “போதும்! நான் பால் குடிக்க வேண்டும்…”

கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே இருந்த எலி, பால் பானைக்குள் விழுந்துவிட்டது.

இதைக் கண்ட கீழே இருந்த எலி, “நல்லது, இனி எனக்குத்தான் எல்லா பாலும்” என்று நினைத்தது. பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது.

நீதி : துன்பத்தில் இருந்து விடுதலை அடைய மற்றவர்களின் ஒத்துழைப்புத் தேவை.

 
 
யானையின் அடக்கம்

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா, நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டது.

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:

“நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்.”

நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

 
 
சிங்கமும் பங்கும்

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். கழுதைப் புலியோ, “நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?” என்று கேட்டது.

குட்டி கழுதைப்புலி சொல்லியது: “நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்”.

அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கோண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. “ஏன் இங்கே வந்தாய்?” – கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.

பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: “ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்”.

குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: “பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே?”

“மகனே! சிங்கம் மிகக் கொடுரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக” என்றது தாய் கழுதைப்புலி.

நீதி : நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

 

கருத்துடன் செயல்படு – நீதிக் கதைகள்

ஓரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.

அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.

அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.

அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.

இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான்.

அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.

பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.

ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.

நீதி : செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.

சொல் புத்தி – நீதிக் கதைகள்

ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, “பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு” என்று ஏளனம் செய்தனர்.

இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், “இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்” என்று கிண்டலடித்தனர்.

இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து “கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்” என்றான்.

வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார்.

கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து “இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!” என்று காட்டமாக விமர்சித்தான்.

இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு “மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!” என்று முடிவு செய்தனர்.

அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

நீதி : சொல் புத்தியைவிட சுயபுத்தி மிக அவசியம்.

குறையா நிறையா? – நீதிக் கதைகள்

ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

“ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்”

அதன் எஜமானன் கூறினான்.

“பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்”

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

நீதி : அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.

உழைப்பே அதிர்ஷ்டம் தரும் – நீதிக் கதைகள்

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேன்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருன்ட்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.

முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா “இரண்டடி” என்று சொல்வதற்கு பதிலாக “ஓரடி” என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை.

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது.

‘இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும்’ என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே!

அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் ‘சரி.. தோண்டியது வீணாக வேண்டாம்’ என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

நீதி : உழைப்பால் வரும் பயனைத்தான் மிகப்பெரிய புதையல்

மாணவர்களே அசத்துங்கள் ஆசிரியர்களை – விந்தையான கணக்கு !

பள்ளி ஆரம்பமாமும் காலங்களில் மாணவர்கள் தமது விடுமுறைகளைப் பற்றியும் எங்கு சென்றோம், என்ன செய்தோம் என சக மாணவர்களிடம் சொல்லி மகிழ்வார்கள். சிலர் தம் தோழர்களை கவர்வதுக்கு என்றே ஆய்த்தமாக செல்வார்கள்.

அப்படி நீங்களும் உங்கள் நண்பர்களையும் கவர வேண்டுமா?

இதோ ஒரு விடயம்! இதை உங்கள் நண்பர்களுக்கு மட்டும் இல்லாமல் உங்கள் ஆசிரியரையும் அசத்துங்கள்.

எமது கணக்குப் பாடத்தில் என்னென்ன விந்தைகள் இருக்கு என்று ஒரு சிறு உதாரனம்…

1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321

1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 +10= 1111111111

9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888

ஆச்சரியமாக இருக்கின்றதா?

கூடவே கீழே உள்ளதையும் பாருங்கள்:

1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111 = 12345678987654321

Now, take a look at this…

101%

From a strictly mathematical viewpoint:

What Equals 100%?
What does it mean to give MORE than 100%?

Ever wonder about those people who say they are giving more than 100%?

We have all been in situations where someone wants you to
GIVE OVER 100%.

How about ACHIEVING 101%?

What equals 100% in life?

Here’s a little mathematical formula that might help
answer these questions:

If:

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Is represented as:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26.

If:

H-A-R-D-W-O- R- K

8+1+18+4+23+ 15+18+11 = 98%

And:

K-N-O-W-L-E- D-G-E

11+14+15+23+ 12+5+4+7+ 5 = 96%

But:

A-T-T-I-T-U- D-E

1+20+20+9+20+ 21+4+5 = 100%

THEN, look how far the love of God will take you:

L-O-V-E-O-F- G-O-D

12+15+22+5+15+ 6+7+15+4 = 101%

Therefore, one can conclude with mathematical certainty that:

While Hard Work and Knowledge will get you close, and Attitude will
get you there, It’s the Love of God that will put you over the top!

It’s up to you if you share this with your friends & loved ones just
the way I did..

நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா?

ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தேன்.

அங்கே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த ஒரு நபர் என்னிடம் வந்து கேட்டார்,

“நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா ?”

கொஞ்சம் வித்தியாசமாக பதிலளிக்கலாமே என்று எண்ணிய நான்,

“இன்னும் 5 நிமிஷத்துல தாலி கட்டினதும் ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப் போறாங்க, பொண்ணு வீடு பிள்ளை வீடுன்னு ஏன் பிரிச்சுப் பேசறீங்க.” அப்படின்னுதான் சொன்னேன்.

அதுக்குள்ள அந்த லூசு சொல்லுது,

“ஓ.கோ.. .என்னை மாதிரி ஓசில சாப்பிட வந்தவர்தானா நீங்களும். ..”

-Ravi Chandran

நன்றி : உலக தமிழ் மக்கள் இயக்கம்