எனக்கு பிடித்த விமரிசனம் & கட்டுரை

விகடனில் கலைஞருக்கு எதிராக கட்டுரை – அதிசயம் – ஆனால் உண்மை …!!! – விமரிசனம் – காவிரிமைந்தன்

விகடன் செய்திகள் தளத்தில் இந்த கட்டுரையைப் படித்து
விட்டு பலமுறை என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.

கலைஞர் கருணாநிதியின் தலைமையில்
திமுக சார்பில் நேற்று சென்னையில் ஒரு “பிரம்மாண்ட”
பேரணி நடத்தப்பட்டது.

பேரணிக்கான காரணம் – கோரிக்கை –
செம்பரம்பாக்கம் ஏரியை கால தாமதமாக திறந்து
சென்னையை வெள்ளக்காடாக்கியதைக் குறித்து
விசாரிக்க உடனடியாக உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு
“நீதி விசாரணை” நடத்தப்பட வேண்டும்…!!!

கலைஞர் பேரணி நடத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் – மதியம் 12 மணிக்கு – அதற்கு நேரெதிராக
” செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதில் எந்த வித தவறும்
நிகழவில்லை ” என்று ஆதாரபூர்வமாக, விவரமாக விளக்கும்
ஒரு கட்டுரையை விகடன் செய்திதளம் வெளியிடட்டுள்ளது.

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு, அதிமுக அரசுக்கு
மிகவும் உதவியாக இருக்கக்கூடிய ஒரு கட்டுரையை
விகடன் வெளியிட்டிருப்பது – அதன் பின்னணியைப் பற்றி
பலமாக யோசிக்கத் தூண்டுகிறது. இதன் பின்னால்
நிச்சயமாக ஒரு காரணம், ஒரு உள்நோக்கம் இருந்தேயாக
வேண்டும்.

அது என்னவாக இருக்க முடியும் …?

விகடன் – திமுகவின் சொந்தப் பத்திரிகை என்கிற விஷயம்
வெளியில் பரவலாகப் பரவி விட்டதால்,

– மக்கள் மத்தியில் அதன் நம்பகத்தன்மை
முற்றிலுமாகப் போய் விட்டது என்கிற பேச்சிலிருந்து
வெளியே வர முயற்சியா …?

– அல்லது சரிந்து விட்ட சர்குலேஷனை மீட்கும் முயற்சியா …?

– அல்லது தேர்தல் சமயத்தில் அனைத்து தரப்பினரும்
படிக்கின்ற மாதிரி ஒரு இமேஜை தனது நிறுவனத்திற்கு
வைத்துக் கொண்டால் தான் –
தாங்கள் சொல்வது அனைவரையும் reach ஆகும்.
இல்லையேல் வெறும் முரசொலி மாதிரி திமுக வினர் மட்டுமே
படிக்கும் பத்திரிகையாகி விடும் என்கிற காரணமா …?

இனி நேரே கட்டுரைக்கு போவோமே …!!!

 

சென்னையின் ‘தாய்மடி’ செம்பரம்பாக்கம் ஏரி. தலைநகரின் தண்ணீர் தாகத்தில், 40 சதவீதத்தை தணிப்பது செம்பரம்பாக்கம்தான். சென்னைவாசிகளால் பாசத்தோடு பார்க்கப்பட்ட இந்த ஏரி, சென்னையை மூழ்கடித்த மழை வெள்ளத்திற்குப் பிறகு, சற்று பயத்தோடு பார்க்கப்படுகிறது.

சென்னை மூழ்குவதற்கு, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தாமதமாக தண்ணீரைத் திறந்துவிட்டதே என்ற புதிய காரணம் கண்டுபிடிக்கப்பட்டதால்தான் அந்த பயம்.  செய்தி வெளியானதும் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அதை அப்படியே பேட்டியாகத் தட்டிவிட்டார். தி.மு.க தலைவர் கருணாநிதி, காரணங்களை அடுக்கி கண்டன அறிக்கை வெளியிட்டார். மழையிலும் வெள்ளத்திலும் ஊறிப்போய் கிடந்த சென்னையில், செம்பரம்பாக்கம் பரபரவென பற்றிக் கொண்டது.

கொழுந்துவிட்டெரிந்த செம்பரம்பாக்கத்தின் அனல், அ.தி.மு.க பொதுக்குழுவிலும் அடித்தது.
அதில் பேசிய  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, “செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட காலதாமதம் ஏற்பட்டதுதான் சென்னை வெள்ளத்தில் மூழ்கக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றன. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விளக்கமாக அறிக்கை கொடுத்த பின்னரும், மீண்டும் மீண்டும் ஒரே பொய்யை  திரும்பத் திரும்ப எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. மழைக் காலங்களில் ஏரிகளில் நீர் அளவு எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்பது பற்றி ‘வெள்ளநீர் ஒழுங்கு விதிமுறைகள்’ என்பதில் மிகத்தெளிவாக உள்ளது. இது நன்றாகத் தெரிந்தும், வேண்டுமென்றே தி.மு.க.வினர் பொய்ப் பிரசாரம் செய்கின்றனர். இதுபற்றி எதிர்க்கட்சியினருக்கு புரியவில்லை என்றால் 8-ம் வகுப்பு கணிதப் பாடத்தில் உள்ள ‘காலம் மற்றும் வேலை’ பற்றிய கணக்குகளைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்” என்று கொந்தளித்தார்.

இவ்வளவு விவகாரம் கிளப்பிய விஷயத்தில்  உண்மையில் நடந்தது என்ன?

பொதுப்பணித்துறையின் நீர் மேலாண்மைப் பிரிவின் சிறப்புப் பொறியாளர் (ஓய்வு) வீரப்பன்,  செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தில் இதுதான் நடந்தது என்று சொல்லும் தகவல்கள் இங்கு அப்படியே…
டிசம்பர் 1, 2 தேதிகளில் என்னதான் நடந்தது?

பொறியாளர் வீரப்பனைப் பொறுத்தவரை,  செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு சரியான சமயத்தில்,  தெளிவான திட்டமிடலுடன்தான் திறக்கப்பட்டது என்கிறார். எந்த வீண் தாமதமும், அலட்சியமும் இல்லை என்று அவர் சொல்கிறார். இதற்கான ஆதாரங்களாக அவர் முன்வைக்கும் வாதங்கள் பின் வருமாறு…

1- செம்பரம்பாக்கத்தில் திறக்கப்பட்டது 29 ஆயிரம் கன அடி மட்டுமே..!

டிசம்பர் 2-ம் தேதி சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் மூழ்கியபோது, அந்த இடத்தைக் கடந்த தண்ணீரின் அளவு, 55 முதல் 60 ஆயிரம் கன அடி. இது அத்தனையும் செம்பரம்பாக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்டதல்ல. செம்பரம்பாக்கத்தின் மொத்தக் கொள்ளளவே 33 ஆயிரம் கன அடிதான். உபரி நீரை வெளியேற்ற அங்குள்ள நீர் வெளியேற்றும் வழிகள் மொத்தம் 24. அவை அனைத்தையும் திறந்துவிட்டாலும்கூட 29 ஆயிரம் கன அடி நீர்தான் வெளியேறும். அதனால், அங்கிருந்து 55 ஆயிரம் கன அடி தண்ணீரோ,  60 ஆயிரம் கன அடி தண்ணீரோ திறந்துவிடப்படவில்லை.
2- முதல்நாளே ஏன் திறக்கவில்லை?
‘டிசம்பர் 2-ம் தேதி மொத்தமாக 29 ஆயிரம் கன அடி தண்ணீரை ஏன் திறக்க வேண்டும்? அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கொஞ்சம் கொஞ்சமாக திறந்துவிட்டு இருக்கலாமே…?’ என்பது சிலரின் கேள்வி.

டிசம்பர் 1-ம் தேதி வரை செம்பரம்பாக்கத்திற்கு வந்த நீர்வரத்து வெறும் விநாடிக்கு 960 கன அடி தண்ணீர். அதில் பொதுப்பணித்துறைப் பணியாளர்கள், 900 கன அடி தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளனர். 60 கன அடி தண்ணீரை சேமித்துள்ளனர். இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.

 

ஒன்றாம் தேதி இரவுக்கு முன்புவரை சென்னையிலும்,  அதனைச் சுற்றி உள்ள பகுதியிலும் பெய்த மழையின் அளவு வெறும் 50 மி.மீ .தான். ஆனால், ஒன்றாம் தேதி இரவிலும் அதற்குப் பிறகும்,  மழை பேய்த்தனமாக பெய்யத் தொடங்கியது. 50 மி.மீ  பெய்து கொண்டிருந்த மழையின் அளவு,  கிடுகிடுவென அதிகரித்து 400 மி.மீ க்கு உயர்ந்தது. அதனால், இரண்டாம் தேதி, அணைக்குச் சட்டென விநாடிக்கு, 26 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத் தொடங்கியது. இது ஆபத்து என்று உணர்ந்த பொதுப்பணியாளர்கள்,  அணையிலிருந்து 29 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டனர். இதில் எந்தத் தவறும் இல்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஒன்றாம் தேதி வரை வெறும் 960 கன அடி தண்ணீர்தான் அணைக்கு வந்தபோது, அதில் சரியாக 900 கன அடி  தண்ணீரை பொதுப்பணியாளர்கள் திறந்துவிட்டுள்ளனர்.

ஒன்றாம் தேதி இரவுக்குப் பிறகு சட்டென 26 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து உயர்ந்துள்ளது. அதனால், அதில் 29 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர். 29 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் என்பது எதிர்பார்க்காத ஒன்று. ஏனென்றால், கன மழை பெய்யும் என்றுதான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததே தவிர, 400 மி.மீ  அளவிற்கு அது பெய்யும் என்பது வானிலை ஆய்வு மையம் உள்பட எத்தரப்பும் எதிர்பார்க்காதது. அதுபோல், நாம் நினைப்பதுபோல் முதல் நாளே திறந்துவிட்டிருந்தால், 960 கன அடித் தண்ணீரையும் திறந்துவிட்டிருக்க வேண்டும். அப்படியெல்லாம் செய்ய முடியாது. ஏனென்றால், 1-ம் தேதி இரவுக்குமேல் பெய்த மழையைப்போல் ஒரு ராட்சத மழை பெய்யவில்லை என்றால், மொத்தத் தண்ணீரையும் கடலுக்கு அனுப்பிவிட்டு அணையை காயப்போட்டு வைக்க முடியாது. பிறகு மழை பெய்தும் சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்கும். அப்போது, தண்ணீரை ஒழுங்காகச் சேமித்து வைக்கவில்லை என்று அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனம் கிளம்பும்!

தேதி அணையின் கொள்ளளவு(TMC) ஒரு விநாடிக்கு ஏரிக்கு வந்த நீர் கனஅடியில் ஒரு விநாடியில் ஏரியிலிருந்து வெளியேறிய நீரின் அளவு கனஅடியில்
01.12.2015 3.141 960 900
02.12.2015 3.396 26,000 29,000
03.12.2015 3.094 10,200 11,000
04.12.2015 3.132 4,900 5,000

3 – முதல்வர் ஜெயலலிதா உத்தரவுக்காக காத்திருந்தனரா?

பொதுப்பணித்துறைப் பணியாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்கத் தேவையில்லை. வெள்ளம், பெருமழைக் காலம் போன்ற நேரங்களில், அவர்களுக்கு யாருடைய உத்தரவும் தேவையில்லை. தங்களுடைய பொறுப்பில் இருக்கும் ஏரிக்குப் பின்புறம் உள்ள பகுதியைப் பற்றியோ, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கு முன்புறம் என்ன நடக்கிறது என்பதைப் பற்றியோ அவர்கள் கருத்தில் கொள்ளமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரிக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து, அதில் சேமிக்க வேண்டிய நீரை சேமித்துக் கொண்டு மற்றவற்றை திறந்துவிடுவார்கள். ஒன்றாம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு,  29 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத் தொடங்கியதும்,  அவர்கள் யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்கவில்லை. உடனடியாகத் திறந்துவிட்டனர். அவர்கள் யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்கவும் தேவையில்லை. ஏனென்றால், அவர்களுக்கு அந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது!

4 – பாசனத்திற்குத் திறப்பது வேறு… வெள்ளச் சமயங்களில் திறப்பது வேறு!

அணையில் சேமிக்கப்பட்டுள்ள தண்ணீரை பாசனத்திற்காக திறக்கும்போது, தலைமைச் செயலாளர், முதலமைச்சரிடம் அனுமதி கேட்பது நடைமுறை. ஏனென்றால், அது குடி நீர் தேவைக்கும் அல்லது எதிர்காலத்தில் தகுந்த விவசாய காலத்திற்கும் ஏற்றவகையில் அவற்றைப் பயன்படுத்தலாமா… அல்லது இப்போது திறந்துவிடலாமா? என்று அனுமதி கேட்பார்கள். ஆனால், மழை வெள்ளம் போன்ற பேரிடர் சமயங்களில் இதுபோன்ற நடைமுறைகளுக்காக காத்திருக்கமாட்டார்கள். கோப்புகள் கையெழுத்தாகி வரும் வரையில் பொறுத்திருக்கத் தேவையும் இல்லை. அதை அந்தந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுப்பணித்துறை பொறியாளர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம். அதுபோல்தான் இப்போதும் நடந்தது. அதனால், தலைமைச் செயலாளர் உத்தரவுக்காகக் காத்திருந்தனர், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தவுக்காக காத்திருந்தனர் என்றெல்லாம் சொல்லப்படுவது முகாந்திரமற்றக் குற்றச்சாட்டுக்கள்.

5- நீர் அளவு 29 ஆயிரம் கன அடி எப்படி 60 ஆயிரமானது?

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர்தான் அடையாறாக சென்னைக்கு வருகிறது. அப்படி அது வரும் வழியில் 278 ஏரிகளும், நீர்நிலைகளும் உள்ளன. அந்தத்  தண்ணீரையும் அது உள்வாங்கிக் கொண்டு வருகிறது. மேலும், அன்று முழுவதும் விடாமல் கொட்டிக் கொண்டிருந்த மழையும் அதோடு சேர்ந்து கொண்டது. அந்தத் தண்ணீரெல்லாம் செம்பரம்பாக்கத்தோடு சேர்ந்துதான் 60 ஆயிரம் கன அடி தண்ணீரானது..

6 – 2005ம் ஆண்டு ஏற்படாத சேதம் இப்போது ஏன்?

சைதாப்பேட்டை பாலத்திற்கடியில் தண்ணீர் கடப்பதற்கு மொத்தம் 12 வழிகள் இருந்தன. ஆனால், அவற்றில் 7 அடைக்கப்பட்டுவிட்டது. எல்லாம் ஆக்கிரமிப்புகள். 2005-ம் ஆண்டு 60 ஆயிரம் கன அடித் தண்ணீர் ஓடியபோது, 12 வழிகளும் இருந்தன. ஆனால், இப்போது அவை இல்லையே. பிறகு எப்படித் தண்ணீர் வெளியேறும்? ஆக்ரோஷமாக வரும் வெள்ளம் ஊரைத்தான் காவு வாங்கும்!

7 – சிதைக்கப்பட்ட அடையாற்றின் கரைகள்!

ஒரு ஆறு என்பது தன்னளவில் அகன்று கொண்டே வர வேண்டும். ஆனால், செம்பரம்பாக்கத்தில் இருந்து தண்ணீரைப் பெற்றுக் கொண்டு வரும் அடையாற்றின் கரைகள் எந்தளவிற்கு சிதைக்கப்பட்டு இருக்கிறது என்பதை பார்த்தால், சென்னை வெள்ளத்தில் மூழ்கியதற்கான காரணத்தையும் உணர முடியும்.

செம்பரம்பாக்கம் ஏரி நீர் கடலில் கடக்கும் பாதை
அடையாறு மந்தநந்தபுரத்தில்,  105 மீட்டராகவும் ஆழம் 9 மீட்டராகவும் இருந்து,  ஏர்போர்ட் வரும்போது 222 மீட்டர் அகலமாகவும், ஆழம் வெறும்  6 மீட்டராகவும் குறுகிறது. மணப்பாக்கத்தில் அதுவும் குறுகி, அகலம் 112 மீட்டராகவும் ஆழம் 5 மீட்டராகவும் மாறுகிறது. பிறகு, மீண்டும் நந்தம்பாக்கத்தில் ஆற்றின் அகலம் 59 மீட்டராகக் குறுகி, ஆழம்  9 மீட்டராகிவிடுகிறது. சைதாப்பேட்டையில் ஆற்றின் அகலம் 83 மீட்டராகவும், ஆழம் 4 மீட்டராகவும் சிறுத்துவிடுகிறது. அடையாறு பாலத்தின் அருகில்  222 மீட்டர் அகலம் வெகுவாகச்  சுருங்கிப் போய்விடுகிறது.

ஆற்றின் பரப்புக்கு மட்டுமல்ல, ஆற்றின் கரைகளுக்கும் இதுதான் நிலை. ஒருபக்கம் உயர்ந்தும், ஒரு பக்கம் அரிக்கப்பட்டும் கிடக்கிறது. இப்படி இருக்கும்போது, பரந்து வரும் வெள்ளத்தின் வேகம், தன் பாதையில் தடை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அடித்து நொறுக்கிக் கொண்டு போகிறது. இதுபோதாதென்று அடையாற்றின் கரைகளைச் சிதைத்து வைத்துள்ளனர். அதனால்தான், கரையை நாம் பலவீனப்படுத்தி வைத்த இடங்களில், ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. ஆற்றின் ஆழத்தை கட்டுமானக் கழிவுகளால் நிரப்பிய இடங்களில், அது பொங்கி  தெருத் தெருவாக ஓடியது.

அடையாறு ஆற்றுப்படுகையின் ஆக்கிரமிப்புகளை சுட்டிக் காட்டும் வரைபடம்

கடல் நோக்கி செல்லச் செல்ல ஆக்கிரமிப்புகளால் குறுகும் அடையாற்றின் பரப்பளவு!

(பொதுவாக ஆற்றின் இருபக்க கரைகளும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், தாழ்வான கரையில் வெள்ளம் ஏறும். ஆனால், அடையாற்றின் கரைகள் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதையும் கடைசி அட்டவணை  உணர்த்துகிறது!)

செம்பரம்பாக்கத்தில் இருந்து தொலைவு இடத்தின் பெயர் ஆற்றின் பரப்பு ஆற்றின் ஆழம் கரைகளின் உயரம் (இடது -வலது)
8.40 கி.மீ உள்வட்டச்சாலை 116 மீட்டர் 11 மீ 10 மீ -13மீ
13.40 கி.மீ விமானநிலையம் 222 மீட்டர் 6 மீ 8மீ-7மீ
18.40கி.மீ நந்தம்பாக்கம் 59 மீட்டர் 9 மீ 7 மீ-6மீ
23.40கி.மீ சைதாப்பேட்டை 83.3 மீட்டர் 4 மீ 5 மீ -9 மீ
28.80 கி.மீ திரு.வி.க பாலம் 485 மீட்டர் 1 மீ 4 மீ – 5 மீ

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, தாமதமாக தண்ணீர் திறந்துவிட்டதுதான் சென்னை மூழ்கியதற்கு காரணம் என்று சொல்வது சுத்தப் பொய். அதனால், சென்னை மூழ்கவில்லை. தண்ணீரும் அங்கிருந்து தாமதமாகத் திறந்துவிடப்படவில்லை. சரியான நேரத்தில், சரியான அளவில் தான் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. டிசம்பர் முதல்நாள் வரை ஏரிக்கு தண்ணீர் வரத்து 960 கன அடிதான் இருந்தது. அப்போது 900 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இது சரியான அளவு. ஆனால், 2-ம் தேதி அப்போது பெய்த கனமழையால் தண்ணீரின் வருகை அளவு திடீரென 29 ஆயிரம் கன அடியாகக் கூடியது. அப்போது 26 ஆயிரம் கன அடி தண்ணீரை  திறந்துவிட்டுள்ளனர் பொதுப்பணித்துறைப் பணியாளர்கள். அவர்களுடைய வேலை, ஏரிக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது. எந்த நேரத்தில் அதைத் திறந்துவிட வேண்டும். எவ்வளவு திறந்துவிட வேண்டும் என்பதை கணக்கிட்டு செயல்படுவதுதான்.

ஏரிக்கு அப்பால் நடக்கப்போவதையோ, ஏரிக்கு முன்னால் நடப்பதையோ பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அது அவர்களுடைய வேலையும் இல்லை. தண்ணீர் வரும் பாதையை சரியாக பராமரிக்காமல், சைதாப்பேட்டை பாலத்தில் உள்ள நீர் வெளியேறும் வழிகளை அடைத்து வைத்தால் அதற்கு அவர்களா பொறுப்பு? அதுபோல அடையாற்றின் கரைகளைச் சிதைத்து வைத்துள்ளனர். ஆற்றுக்குள் கட்டுமானக் கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். இதுபோன்ற காரணங்களால்தான் அடையாற்றில் வந்த வெள்ளம் ஊருக்குள் புகுந்து சென்னையை மூழ்கடித்தது.

-ஜோ. ஸ்டாலின் 

படங்கள்: எம். உசேன், ப.சரவணக்குமார், தி. குமரகுருபரன்
நன்றி விமரிசனம் – காவிரிமைந்தன்
நன்றி விகடன்

22 மாடுகள்… மாதம் ஒரு லட்சம்! பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பால் பண்ணை! – விகடன்

ரம்பரையாக மாடு வளர்ப்பவர்களே பால் பண்ணையில் போதிய வருமானம் இல்லை என வேறு தொழில்களை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில்… “சரியாகத் திட்டமிட்டு செய்தால் பசுக்களில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்து நல்ல லாபம் எடுக்க முடியும்” என்று விரல் உயர்த்துகிறார், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகிலுள்ள தம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத்.

பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த ஹரிபிரசாத்தைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

‘‘நான் சென்னை, பல்லாவரத்துல குடியிருக்கேன். பால் பண்ணை வைக்கணுங்கிற ஆர்வத்துல ஒரு  மணி நேர பயண தூரத்துல இருக்கிற மாதிரி நிலம் தேடுனேன். அப்படி 2001-ம் வருஷம் கிடைச்சதுதான் இந்த நிலம். எங்க வீட்டுல இருந்து 50 கிலோ மீட்டர் தூரம்தான். மொத்தம் மூணே முக்கால் ஏக்கர். பக்கத்துலேயே ரெண்டே கால் ஏக்கர் நிலத்தை குத்தகைக்குப் பிடிச்சிருக்கேன். மொத்தம் ஆறு ஏக்கர். இதுல, நாலு ஏக்கர்ல மாடுகளுக்குத் தேவையான கோ-3, கோ-4, சவுண்டல், அகத்தி மாதிரியான பசுந்தீவனங்களைப் போட்டிருக்கேன். ஒண்ணே கால் ஏக்கர்ல ஏ.டி.டீ-43 நெல் இருக்கு. மீதி இடங்கள்ல கிணறு, மாட்டுக் கொட்டகை, பாதை எல்லாம் இருக்கு.

பயிற்சிக்குப் பிறகு பண்ணை!

பால் பண்ணை வைக்கணும்னு முடிவு பண்ணிட்டதால ‘கே.வி.கே’வில் மாடு, கோழி வளர்ப்பு தொடர்பான பயிற்சிகளை எடுத்துக்கிட்டு… ஆரம்பத்துல ஆறு கலப்பின மாடுகளை வாங்கினேன். அவை மூலமா, தினமும் 20 லிட்டர் வரை பால் கிடைச்சது. தனியார் பால் பண்ணைக்குத்தான் பால் கொடுத்துக்கிட்டிருந்தேன். அதோட, இயற்கை முறையில பசுந்தீவனங்கள், காய்கறி, சோளம், சாமை, தினைனு சாகுபடியும் செய்துட்டு இருந்தேன். சிறுதானியங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால விற்பனைக்கு பிரச்னையில்லை. ஒரு கட்டத்துல சிறுதானிய விவசாயத்துல கவனம் போனதால மாடுகளை சரியா கவனிக்க முடியாமப் போயிடுச்சு. ஆனா, இப்போ மறுபடியும் பால் உற்பத்தியில முழுகவனத்தையும் திசை திருப்பியிருக்கேன்.

கைகொடுத்த வங்கிக்கடன்!

பால் விற்பனைனு மட்டும் நின்னுடாம மதிப்புக் கூட்டல் செய்து கூடுதல் லாபம் பாக்கணும்னு முடிவு பண்ணி… வங்கியில 35 லட்ச ரூபாய் கடன் வாங்கி, பால் பண்ணையை விரிவுபடுத்தினேன். கிணறு வெட்டி, நிலத்தைச் சரிபடுத்தினேன். அதோட, தார்பார்க்கர், சாஹிவால், சிந்தினு நாட்டு மாடுகளையும், பால் மதிப்புக் கூட்டல் இயந்திரங்களையும் வாங்கினேன். இப்போ மொத்தம் 22 மாடுகள் இருக்கு. பால் பண்ணை ஆரம்பிச்சு ஒரு வருஷம் முடியப் போகுது. இப்ப, தினமும் 150 லிட்டர்ல இருந்து
180 லிட்டர் வரை பால் கிடைக்குது.

இயற்கைப்பாலுக்கு கூடுதல் ருசி!

இயற்கை விவசாயத்தில் விளைந்த தீவனங்களை மட்டுமே சாப்பிடுற நாட்டு மாடுகளோட பால்ங்கிறதால, என் பண்ணை பால் நல்ல திக்கா, ருசியா இருக்கும். இந்த பாலுக்கு பிராண்ட் பெயர் பதிவு செஞ்சு, சிறுதொழிலுக்கான சான்றையும் வாங்கி பாக்கெட்ல அடைச்சு சென்னையில இருக்கிற பசுமை அங்காடிகளுக்குக் கொடுக்கிறேன். நல்ல வரவேற்பு இருக்கு. மீதமுள்ள பால்ல ஆர்டரைப் பொறுத்து பனீர், வெண்ணெய், நெய் தயாரிச்சு விற்பனை செய்றேன். அப்படியும் பால் மீதமானா தனியார் பண்ணைகளுக்கு ஊத்திடுவேன்” என்ற ஹரிபிரசாத், மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்புப் பற்றிச் சொன்னார்.

அட்சயப் பாத்திரம்!

“பால் பண்ணை வெக்கிறவங்க, பாலை மட்டும்தான் பணமா பாக்குறாங்க. அதனாலதான் சிலசமயங்கள்ல நஷ்டம் வந்துடுது. ஆனா, பசு ஒரு அட்சயப் பாத்திரம் மாதிரி. அது கொடுக்குற அத்தனையும் மதிப்புமிக்கது. அதை நான் சரியா புரிஞ்சுக்கிட்டதால எதையுமே வீணாக்கிறதில்லை. சாணம், சிறுநீரை விற்பனை செய்றேன். பஞ்சகவ்யா தயாரிச்சு விற்பனை செய்றேன். யாகத்துக்கான வறட்டி தயார் பண்ணி விற்பனை செய்றேன். தார்பார்க்கர் மாட்டுச்சாண வறட்டி யாகத்துக்கு நல்லதுங்கிறதால எப்பவும் ஆர்டர் இருந்துகிட்டே இருக்கு. ஒரு லிட்டர் சிறுநீரை எட்டு ரூபாய்னும், ஒரு வறட்டியை மூணு ரூபாய்னும் விற்பனை செய்றேன்.

‘இப்ப என்கிட்ட மொத்தம் 22 மாடுகள் இருக்கு. இதன் மூலமா மாசத்துக்கு சராசரியா 5 ஆயிரம் லிட்டர் பால் கிடைக்குது. இதுல, பசுமை அங்காடிக்கு லிட்டர் 55 ரூபாய் விலையில தினமும் 50 லிட்டர் கொடுக்கிறேன். மாசத்துக்கு 82 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்குது. நெய், பனீர், வெண்ணெய் விற்பனை மூலமா சராசரியா மாசத்துக்கு 75 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. தனியார் பண்ணைக்குக் கொடுக்கிற பால் மூலமா மாசத்துக்கு 34 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்குது. சிறுநீர், சாணம், பஞ்சகவ்யா, வறட்டி, கோழி  முட்டை, வாத்து முட்டை விற்பனை மூலமா மாசத்துக்கு சராசரியா 33 ஆயிரம் ரூபாய் வருது. ஆக மொத்தம் மாசம் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம். இதுல, 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவு போக, ஒரு லட்ச ரூபாய் லாபமா நிக்குது. அதுல, கடனுக்கான தவணைத் தொகையா மாசம் 80 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருக்கு. மீதி 20 ஆயிரம் ரூபாய் கையில நிக்குது. வங்கிக் கடனை அடைச்சப் பிறகு, மாசம் ஒரு லட்சம் சொளையா கைக்கு கிடைக்கும்’’ என்ற ஹரிபிரசாத், மாடுகளுக்கான நோய் மேலாண்மை பற்றியும் பேசினார்.

தீவனத்தோடு மருந்து!

“மாடுகளுக்கு கோமாரி, சப்பை நோய்னு சீசனுக்கு தகுந்தாப்புல நோய்கள் வரும். அந்தந்த சீசனுக்குத் தகுந்த மாதிரி நோய் வர்றதுக்கு முன்னாடியே தடுப்பூசி போட்டுட்டா நோய்த்தாக்குதலைத் தவிர்த்துடலாம். அதுபோக, மடிவீக்க நோய்தான் பெரும் பிரச்னை. அது எப்ப வரும்னே தெரியாது. அதுக்கு மருத்துவர்கள் ஆலோசனை கண்டிப்பா அவசியம். நாங்க பெரும்பாலும் கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி கிட்டத்தான் ஆலோசனை கேட்டுக்குவோம். அது போக, எங்க மாடுகளுக்கு… வாரத்துல ஒரு நாள் தீவனத்தோட வேப்பிலை; ஒரு நாளைக்கு பூண்டு; ஒரு நாளைக்கு மஞ்சள்னு கொடுத்துடுவோம். அதுனால பெருசா நோய் தொந்தரவு இல்லாம ஆரோக்கியமா இருக்கு.

பண்ணையில இருக்கிற வாத்துகள் மாட்டு ஈ, உண்ணிகளையெல்லாம் பிடிச்சு தின்னுடுது. அதனால பாதி பிரச்னை சரியாகிடுது. பொதுவா, மாடுகளை தினமும் குளிப்பாட்டணும். ஒவ்வொரு மாட்டையும் தனித்தனியா கவனமா பார்க்கணும். சில மாடுக தீவனம் எடுக்காம இருக்கும். சில மாடுக சோர்வா இருக்கும். அந்த மாடுகளுக்கு என்ன பிரச்னைனு பாத்து அதை சரி செய்யணும். ஆகமொத்தம் முறையா செய்தால் பால் பண்ணை நிச்சயமா லாபம் கொழிக்கும் தொழில்ங்கிறதுல சந்தேகமேயில்லை” என்று நம்பிக்கையூட்டும் விதமாகச் சொல்லி விடைகொடுத்தார் ஹரிபிரசாத்.

தொடர்புக்கு,

ஹரிபிரசாத்,

செல்போன்: 99406-69714.

வெண்ணெய்க்கு தார்பார்க்கர்!

வெண்ணெய் எடுக்க தார்பார்க்கர் மாட்டுப்பாலை மட்டுமே பயன்படுத்தும் ஹரிபிரசாத், ‘‘பழைய கால முறைப்படி பானையில வெச்சு கடைஞ்சி வெண்ணெய் எடுக்கிறேன். 25 லிட்டர் பாலுக்கு 5 கிலோ வெண்ணெய் கிடைக்கும். ஒரு கிலோ வெண்ணெய் 700 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது. 5 கிலோவுக்கு 3,500 ரூபாய் கிடைக்கும். விசேஷ நாட்கள்ல வெண்ணெய் ஆர்டர் அதிகமாக வரும்’’ என்கிறார்.

பலே பனீர்!

மதிப்புக் கூட்டுப் பொருட்கள் செய்வதற்கு முறையாகப் பயிற்சி எடுத்திருக்கும் ஹரிபிரசாத், ‘‘பனீர் தயாரிக்க அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. பால்ல எலுமிச்சைச்சாறை விட்டா, கால் மணி நேரத்துல பால் புளிச்சுடும். 5 லிட்டர் பாலுக்கு, ஒரு எலுமிச்சைப் பழத்தைப் பிழிஞ்சு விடலாம். புளிச்சு கெட்டியான பாலை, வடிகட்டி பனீர் தயாரிக்கிற கருவியில போட்டு இடியாப்பம் பிழியிற மாதிரி பிழிஞ்சா, தண்ணியெல்லாம் சுத்தமா வடிஞ்சு கட்டியான பனீர் கிடைக்கும். அதை அப்படியே பாக்கெட் பண்ணிக் கொடுத்திடலாம். ஒரு கிலோ பனீர் தயாரிக்க 10 லிட்டர் பால் தேவை. ஒரு கிலோ பனீர் 400 ரூபாய்க்கு விற்பனையாகுது” என்கிறார்.

கைசெலவுக்கு முட்டை!

சில ரக கோழிகளையும் வளர்க்கிறார் ஹரிபிரசாத். அவற்றைப் பற்றி பேசும்போது, ‘‘எங்க பண்ணையில 150 நாட்டுக்கோழிகள் இருக்கு. கிரிராஜா, வனராஜா ரகக் கோழிகளைத்தான் வளர்க்கிறேன்.

இதுகளுக்காக தனியா கொட்டகை கிடையாது. அப்பப்ப தீவனம் கொடுக்கிறது, தடுப்பூசிகள் போடுறதோட சரி.

காலையில கிளம்பி தோட்டம் முழுக்க மேய்ஞ்சுட்டு, சாயங்கால நேரத்துல அதுகளா அடைஞ்சுக்கும். அடைக்கு வெக்கிறது போக மீதி முட்டைகளை மட்டும் விற்பனை செய்றோம். கோழிகளை விற்பதில்லை. அதேமாதிரி வாத்துகள் மூலமா கிடைக்கிற முட்டைகளை மட்டும்தான் விற்பனை செய்றேன். இந்த முட்டை வருமானம் கைசெலவுக்கு சரியா இருக்குது’’ என்று குஷியாகச் சொல்கிறார்.

துரை.நாகராஜன்

படங்கள்: எஸ்.சந்திரமௌலி

 

நன்றி விகடன்.

நான் அவனில்லை; அறிவாலயத்தை அலற வைத்த கருத்துக்கணிப்பு! – விகடன்

ரும் 2016- சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு தி.மு.க.வுக்கே என்றொரு தகவல் கருத்துக் கணிப்பு மூலம் தெரிவதாக வந்த தகவலால், பிற கட்சிகளை விட ஒரு படிமேலாக தி.மு.க. தலைமையே அதிக டென்ஷனுக்கு ஆளாகியிருக்கிறது என்கிறார்கள். சந்தோஷப்படவேண்டிய விஷயத்துக்கு ஏன் டென்ஷனாகிறார்கள் என்ற கேள்வியுடன் அறிவாலயத்தை வலம் வந்தோம்.

எந்த கல்லூரியும் இதுவரை  செய்ய முன்வராத ‘கருத்துக் கணிப்பு’ பணியை லயோலா கல்லூரி மட்டுமே செய்து வந்தது.  பல விஷயங்களை கருத்துக் கணிப்புக்காக லயோலா கையில் எடுத்தாலும், தேர்தல் கருத்துக் கணிப்பே பெரிய அளவில் பேசப்பட்டது. பிறவற்றிலான கருத்துக் கணிப்பு பிற்காலங்களில் விமர்சனத்துக்கு ஆளாகாமல் போனாலும் தேர்தல் கணிப்பு மட்டும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதாவது, கணிப்பு பொய்த்த போதெல்லாம்.

பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மாணவர் குழுக்களே அப்போதெல்லாம், இந்தக் கருத்துக் கணிப்பில் ஈடுபட்டு வந்தன. இப்போது மீண்டும் சிக்கலில் லயோலா தலையை சிலர் உருட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். ‘நாங்கள் செய்யாத ஒரு வேலையை யாரோ செய்து விட்டு, நாங்கள் கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக கதை கட்டியிருக்கிறார்கள்’ என்றெல்லாம், ஒரிஜினல் கருத்துக் கணிப்புக்குழு தரப்பில் புலம்பல் கேட்க ஆரம்பித்திருக்கிறது.

இப்போது வெளியாகியுள்ள புதிய கருத்துக் கணிப்பு, முன்னாள் மாணவர்கள் குழு ‘பண்பாட்டு மக்கள் தொடர்பகம்’ என்ற பெயரில் வெளியிடப் பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுழன்று, 5176 பேரிடம் தாங்கள் கருத்துக் கணிப்பு நடத்தியதாக சொல்கிறது இந்த குழு.

கருத்துக் கணிப்பின் முடிவாக, 35.6% தி.மு.க.வுக்கும், 33.1% அ.தி.மு.க.வுக்கும் மக்கள் (செல்)வாக்கு இருப்பதாக சொல்லியுள்ளது. அதே கருத்துக் கணிப்பு முதல்வராகும் வாய்ப்பில் முதலிடம் கருணாநிதி, இரண்டாமிடம் ஸ்டாலின், மூன்றாமிடம் ஜெயலலிதா என்றும் சொல்லியிருக்கிறது.

இந்தக் கருத்துக் கணிப்பு ஓப்பன் பிரஸ்மீட் வரை போய் விட்டதோடு, இதை கணித்தவர்கள் லயோலாவின் முன்னாள் மாணவர்கள் என்றும் தகவல் ஓட, வழக்கமாக கணிப்பை வெளியிடும், ‘ரிசர்ச் அசோசியேட் பீப்புள் பவுண்டேசன்’ சார்பில், கார்த்திக் என்பவர் மீடியாக்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், “நாங்கள் அவர்களில்லை, இந்தக் கருத்துக் கணிப்பை செய்தது நாங்களல்ல” என்றிருக்கிறார்.

முதலில் வந்த கருத்துக் கணிப்பை விட, அந்தக் கணிப்பே தவறு அதைச் செய்தது நாங்களல்ல, என்ற இரண்டாவது தகவலே ‘அறிவாலயம்’ ஏரியாவை சூடாக்கி விட்டிருக்கிறதாம்.

சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்ட திமுக தலைமை, “இரண்டுவாரம் கூட ஆகலை, இப்படித்தான் ஒரு சூட்டை ஃபேஸ்-புக்கில் போட்டு விட்டுட்டீங்க… இப்போது மீண்டும் அதே மாதிரி ஒரு சூட்டை கிளப்பி இருக்கீங்க. உதவி செய்யலைன்னாக் கூட பரவாயில்லை ஃபாதர், சும்மா இருந்தா போதும்… நீங்க கட்சிக் காரர்னு எல்லோருக்குமே தெரியும். புரியுதா, புரியுதா என்று பலமுறை கோபமாகச் சொல்லி லைனை துண்டித்துவிட்டு சைலண்ட் ஆகி விட்டாராம் தலைவர்.

– ந.பா.சேதுராமன்

தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கான தனி இணைய முகவரி!

vidhai2virutcham-விதை2விருட்சம்

தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கென்றே தனியாக ஒரு இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. http://cmcell.tn.gov.in/register.php என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக

View original post 49 more words

நீதிக் கதைகள்

அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர* நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர… தனிமை.. தனிமை.. தனிமை..!

சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்..

“உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!”

கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!

அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்..

” நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!”

எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்..

சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..

“ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..

ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..

மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை… ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.

இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க…. அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!

அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்…?

மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..

செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..

“நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..!”

நீதி : தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மிகச்சில மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை.. குறை கூறாதீர்கள்..!

 

கீதாவுக்கு அன்று பிறந்தநாள்.. மிகவும் பரபரப்பாக இருந்தாள். அவளுடன் படிக்கும் ரமேஷிடமிருந்து வாழ்த்து எஸ் எம் எஸ் அல்லது அழைப்பு வரும் என்று காத்திருந்தாள். யார் யாரோ வாழ்த்தினர். ஆனால் ரமேஷிடமிருந்து வரவில்லை. கீதா சற்று கலக்கமுற்றாள். அவளுக்கு அவனைப் பிடிக்கும்.. அவனுக்கு..? தெரியாது.

அப்போது, கீதாவின் குட்டித் தங்கை ரமா கையில் தன் பாடநோட்டுடன் வந்து கீதாவைக் கூப்பிட்டாள்.

“அக்கா..!”

கீதா குனிந்து பார்த்து, அலட்சியப்படுத்தினாள்.. இவளுக்கு இதே வேலை.. இது என்ன.. அது என்ன.. அதைச் சொல்லிக்கொடு என்று ஒரே தொல்லை. இரண்டாம் வகுப்பு படிக்கும் ரமாவுக்கு கீதா என்ன ட்யூஷன் மிஸ்ஸா..?

ரமா மீண்டும் அழைத்தாள்.. “அக்கா..!”

“ப்ஸ்ஸ்ஸ்ஸ்.. தொல்லை பண்ணாதே.. அப்புறம் வா..!”

இந்த ரமேஷுக்கு ரொம்ப கர்வம்.. ஒரு க்ரீட்டிங் அனுப்பினால் குறைந்தா போய்விடுவான்..? மனதுக்குள் சிந்தனை ஓடியதில் நேரம் போனது தெரியவில்லை.

இரவும் வந்தது. ஆனால் ரமேஷிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. கீதா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. ‘திமிர் பிடித்த ராஸ்கல்.. அந்த ஷீலா பிறந்தநாளுக்கு உருகி உருகி கால் செய்தானே.. அவளுக்கு நான் என்ன குறைச்சலா..? மனம் குமைந்தது.

மீண்டும் ரமா.. “அக்கா.. ப்ளீஸ்.. இந்த நோட்டைப் பாரேன்..!”

கீதாவுக்கு இருந்த கடுப்பில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நோட்டைப் பிடுங்கி தரையில் விசிறி அடித்தாள். “போ சனியனே.. மூட் தெரியாமல் உயிரை வாங்காதே..!”

குழந்தை காயப்பட்டு போயிற்று. மெல்ல நோட்டைப் பொறுக்கி எடுத்து தன் அறைக்குத் திரும்பும் ரமாவின் கண்களில் கண்ணீர் கரை கட்டியது.

அப்புறமும் கொஞ்ச நேரம் ரமேஷுக்காக காத்திருந்தாள் கீதா. பலனில்லை.

வீட்டின் உள்ளே ஏதோ வேலையாக போகும்போது கீதா கவனித்தாள்.. ரமாவின் அறையில் விளக்கு எரியவில்லை. தூங்கிவிட்டாளோ..? பாவம் .. குழந்தையை ரொம்ப புண்படுத்திவிட்டேனோ..? கீதா மனம் கசிந்தது..

அறைக்குள் வந்து மெல்ல அழைத்தாள்..

ரமா…!

அக்கா..!

தூங்கிட்டியா..?

இல்லேக்கா..

சரி நோட்டை எடுத்துட்டு வா..

குழந்தை குதூகலத்துடன் கட்டிலில் இருந்து குதித்து ஓடி நோட்டை எடுத்துவந்து நீட்டியது.

எது உனக்கு புரியலே..? காட்டு.. சொல்லித் தரேன்..

இதைப் பார் அக்கா..

நோட்டை விரித்த கீதா வியந்து போனாள்.. குழந்தை தனக்குத் தெரிந்த முறையில் ஒரு பிறந்த நாள் வாழ்த்துப்படம் வரைந்து வைத்திருந்தாள்..!

என் அன்பு அக்காவுக்கு என்று பெரிய எழுத்துகளில் வண்ண வண்ண எழுத்துகளில் எழுதி, கீழே ஒரு பூங்கொத்து.. அதற்கும் கீழே பிறந்த நாள் வாழ்த்துகள் என்று மீண்டும் வண்ண எழுத்துகள்..!

நேற்றிரவு நீண்ட நேரம் ஏதோ படிக்கிறாள் என்று நினைத்தோமே.. இதைத்தான் வரைந்தாளா..? ஆசையுடன் வாழ்த்து தெரிவிக்க வந்த குழந்தையைத்தான் விரட்டி அடித்தேனா..?

“என் செல்லமே..” வாரியணைத்து முத்தமழை பொழிந்தாள் கீதா.

நீதி : கானல் நீருக்காக காலடியில் ஊற்றெடுக்கும் நறுஞ்சுவை நீரை உதாசீனம் செய்யாதீர்.

 

ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள்.
ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.
பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.

வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது.

பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் ‘நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்’ என்று சொன்னான்.

மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள்.

இத்தனை பேரில் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று.

அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர்.

பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது.

மற்ற ஒன்பது விவசாயிகளும் “இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு” என்று கத்திக் கொண்டே அவன் மேல் பாய்ந்தனர்.

அந்த விவசாயி கெஞ்சிக் கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாகக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர்.

அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான்.

அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான்.

மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது. ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளிப் பாதுகாப்பை இழந்து பரிதாபமாகக் கருகிச் செத்துப் போய் விட்டனர்.

நீதி : கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய்.
தீர விசாரித்துத் தெளிவதே மெய்.

 

ஒரு நாட்டை ஆண்ட அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் நிவாரணம் கேட்டான்.

தலைமை மருத்துவன் “மன்னா! இதற்கு மருந்தே கிடையாது” என்று உண்மையைச் சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான். ஆத்திரம் தலைக்கேறி தலைமை மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான்.

ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான். ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு பணித்தான்.

மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான். பிரச்சினைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான். அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர். “வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா” என்று கூறினர்.

நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியவில்லை.

அரசனை இந்த நிலையில் சந்தித்தால் கண்டிப்பாகத் தலைமை மருத்துவனுக்கு நேர்ந்த கதிதான் தமக்கும் நடக்கும் என்று எல்லோருக்கும் புரிந்தது. கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இளைய மருத்துவன் திரும்பவும் “என்னை நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்” என்று கூறினான்.

வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக் கொண்டார்கள். அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன், என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.

அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக் கொண்டு அரசவைக்கு வந்தார்கள்.

அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான். “மன்னா இதில் இருக்கும் மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்று போகும். இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம் முடி வளர ஆரம்பிக்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும் தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும்” என்றான்.

மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. “இப்போதே அந்தப்புரத்திற்குப் போய் தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன்” என்று கிளம்பினான்.

அப்போது மருத்துவன் “மன்னா. இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமென்றால், அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது!” என்றான்.

முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான். மந்திரியிடம் மருத்துவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான். மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டே ஓடி விட்டார்கள்.

அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்து அதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான். அப்போது அவனுக்கு மருத்துவன் சொல்லிய பக்குவம் கவனத்திற்கு வந்தது. “குரங்கை நினைக்கக் கூடாது” என்று நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான். என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்ற இயலவில்லை.

மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை. சற்று நேரம் கழித்து முயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான்.

ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும் மருத்துவனின் அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றிய யோசனை வந்து கொண்டே இருந்தது.

பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப் பேசாமல் வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான்.

நீதி : பிடிவாதக்காரர்களையும், முட்டாள்களையும் திருத்த நேர்வழி பயன்படாது.

 

ஜிங்ஜு ஒரு வித்தியாசமான பிறவி. தான் ஆணழகனாய், அறிவுள்ளவனாய் பிறந்திருந்தால்
இளவரசியை திருமணம் செய்திருக்கலாம் என்று பகல் கனவு காண்பவன். தன்னிடமுள்ள
குறைகளை எண்ணி எப்போதும் வருத்தத்திலேயே இருப்பவன். மருந்திற்கு கூட அவன்
முகத்தில் சிரிப்பை பார்க்க முடியாது. தெருவில் யாராவது சிரித்தால், அவர்கள்
தன்னைப் பார்த்துதான் சிரிப்பதாக நினைத்துக் கொண்டு கோபமடைந்து அவர்களிடம்
சண்டைக்கு செல்வான். இறுதியில் ஒருநாள் தனது குணத்தை புரிந்து கொள்ள இயலாமல்,
ஜென் மாஸ்டரிடம் கேட்டு மனத் தெளிவடைய நினைத்தான்.

“யார் சிரித்தாலும் எனக்கு கோபம் வருகிறது ஏன் அப்படி?” என்று மாஸ்டரிடம்
கேட்டான். இதை கேட்டவுடன் ஜென் மாஸ்டர் `ஹாஹா’ என்று சிரித்துக் கொண்டே
சென்றுவிட்டார்.

ஜென் மாஸ்டர் எதற்கு சிரித்தார்? என்ற காரணம் புரியாமல் ஜிங்ஜு மிகவும்
குழம்பினான். அதை நினைத்து, நினைத்து மூன்று நாட்களாக ஊண் உறக்கமின்றி
குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான்.

அடுத்த நாள் ஜென் மாஸ்டரிடம் சென்று, “அன்று என்னைப் பார்த்து ஏன் மாஸ்டர்
சிரித்தீர்கள்? நான் வருத்தத்தில் மூன்று நாட்களாக சாப்பிடவே இல்லை” என்று
கூறினான். உடனே ஜென் மாஸ்டர், “முட்டாளே! இப்போதாவது உனக்கு புரிகிறதா? நீ
கோமாளியை விட சிறியவன், அது தான் உனது பிரச்சினை” என்று கூறினார். இதைக் கேட்ட
ஜிங்ஜு அதிர்ந்து போனான்.

“நான் ஒரு கோமாளியை விட சிறியவன் என எக்காரணத்தால் குறிப்பிட்டீர்கள்?” என்று
கோபத்துடன் கேட்டான்.

அதற்கு ஜென் மாஸ்டர், “கோமாளியாவது பிறர் சிரிப்பதைக் கண்டு மகிழும்
தன்மையுடையவன். ஆனால் நீ மற்றவர்கள் சிரிப்பதை எண்ணி வருந்தி குழப்பத்துடன்
இருக்கிறாய். இப்போது சொல், நீ கோமாளியை விட சிறியவன் தானே” என்றார்.

இதைக் கேட்ட ஜிங்ஜு தனது தவறை உணர்ந்து, குழப்பம் தீர்ந்த சந்தோஷத்தில்
சிரித்தான்.

நீதி: என்ன நடந்தாலும், அதனால் விளையும் நன்மையை மட்டும் எடுத்துக் கொண்டு
மகிழும் தன்மை, வாழ்வில் மன அமைதி மற்றும் சந்தோஷத்தை பெற்றுத் தரும்.

நீதிக் கதைகள்

ஏமாந்த சிறுத்தை
 
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.

அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. ‘எதைத் துரத்தலாம்’ என்று தயங்கி நின்றது. பிறகு, ‘சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்’ என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.

உடனே சிறுத்தை “அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி… புள்ளி மானைப் பிடிக்கலாம்” என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.

நீதி : முக்கியமான நேரத்தில் முக்கியமான் முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.

 
 
எலியும் பாலும்

பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உயரமான பானை. இதனால் பாலைக் குடிக்க முடியாமல் எலிகள் திண்டாடின.
இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது. அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.

அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது: “போதும்! நான் பால் குடிக்க வேண்டும்…”

கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே இருந்த எலி, பால் பானைக்குள் விழுந்துவிட்டது.

இதைக் கண்ட கீழே இருந்த எலி, “நல்லது, இனி எனக்குத்தான் எல்லா பாலும்” என்று நினைத்தது. பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது.

நீதி : துன்பத்தில் இருந்து விடுதலை அடைய மற்றவர்களின் ஒத்துழைப்புத் தேவை.

 
 
யானையின் அடக்கம்

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா, நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டது.

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:

“நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்.”

நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

 
 
சிங்கமும் பங்கும்

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். கழுதைப் புலியோ, “நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?” என்று கேட்டது.

குட்டி கழுதைப்புலி சொல்லியது: “நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்”.

அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கோண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. “ஏன் இங்கே வந்தாய்?” – கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.

பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: “ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்”.

குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: “பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே?”

“மகனே! சிங்கம் மிகக் கொடுரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக” என்றது தாய் கழுதைப்புலி.

நீதி : நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

 

கருத்துடன் செயல்படு – நீதிக் கதைகள்

ஓரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.

அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.

அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.

அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.

இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான்.

அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.

பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.

ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.

நீதி : செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.

சொல் புத்தி – நீதிக் கதைகள்

ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, “பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு” என்று ஏளனம் செய்தனர்.

இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், “இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்” என்று கிண்டலடித்தனர்.

இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து “கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்” என்றான்.

வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார்.

கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து “இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!” என்று காட்டமாக விமர்சித்தான்.

இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு “மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!” என்று முடிவு செய்தனர்.

அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

நீதி : சொல் புத்தியைவிட சுயபுத்தி மிக அவசியம்.

குறையா நிறையா? – நீதிக் கதைகள்

ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

“ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்”

அதன் எஜமானன் கூறினான்.

“பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்”

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

நீதி : அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.

உழைப்பே அதிர்ஷ்டம் தரும் – நீதிக் கதைகள்

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேன்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருன்ட்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.

முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா “இரண்டடி” என்று சொல்வதற்கு பதிலாக “ஓரடி” என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை.

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது.

‘இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும்’ என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே!

அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் ‘சரி.. தோண்டியது வீணாக வேண்டாம்’ என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

நீதி : உழைப்பால் வரும் பயனைத்தான் மிகப்பெரிய புதையல்